Sunday, September 30, 2007

எஸ்.எம்.எஸ். காதல் கவிதை


பன்னீர் வாசனைதான்...!
எத்தனை பேருக்கு தெரியும்?
அது பல ரோஜாக்களின்
கண்ணீர் என்று...!


நான் தூங்காமல் தவிக்கிறேன்...!
நீ நிம்மதியாக தூங்குகிறாயோ
இல்லையோ என்று...!

Monday, September 24, 2007

தமிழ்க் கணினி-புதுச்சேரியில் வலைபதிவர் பட்டறை

புதுச்சேரியில் பதிய பதிவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2007, 9 ஆம் நாள் இப்பயிற்சி வகுப்பு நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பானது முற்றிலும் புதியவர்களுக்கானதாகும். இதில் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, ஒருங்குறி எழுத்துறு பயன்படுத்துவது அதற்கான மென்பொருட்களை நிறுவுவது வலைத்தளங்களில் எழுதுவது உள்ளிட்டவற்றுக்கு நேரடி பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர.

இந்த பதிவர்களுக்கு ஏற்படும் தொழில் நுட்ப பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாகவே இந்த பட்டறையை நடத்துவது என கருதி தொடக்கத்தில் பேசிவந்த நிலையில் பின்னர் புதியவர்களுக்குமாக சேர்த்து மொத்தமாக 100 பேர்களுக்கு இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை மாலை என இரு வேளையும் நடைபெறும். காலை கணினி பற்றி பொதுவானத் தகவல்களும், மாலை பதிவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்.

இந்த பதிவர் பட்டறை "தமிழ்க் கணினி"" என்ற பெயரில் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதன் நோக்கம் கணனி முழுமையும் தமிழ்படுத்த வேண்டும் என்பதுமாகும். இதனால், தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். அதனுடன் ஏகலப்பை, உள்ளிட்ட சென்னைப் பதிவர்கள் வழங்கிய மென்பொருட்களும், புதிய மென்பொருட்கள் பலவும் வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளோம்.

இதில் தமிழ் 99 விசைப்பலகை பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக கணனியில் தமிழ் என்பது தொடர்பான விவரங்கள் அங்கிய ஒரு கணனி மலர் ஒன்று வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளோம்.

தொடக்கமாக கணனி தொடர்பான தொழில் நுட்பம் அறிந்தவர்களை அழைத்து தொடங்கி வைப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்.

தமிழ் நாடு அரசு செய்துள்ள பல பணிகளை புதுவை அரசும் மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தும் வகையில் புதுவை முதல்வரை அழைத்து இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக "சென்னை வலைப்பதிவுப் பட்டறை" போலவும் அதில் கூறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பட்டறையாக இது இருக்கலாம்.

"புதுவை வலைப்பதிவர் சிறகம்" என்ற பெயரிலான அமைப்பு இந்த பட்டறையை நடத்துவது எனவும் முடிவு செய்து
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ் ஆர்வலர்கள், கணனி ஆர்வலர்கள், இணையப் பதிவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், சில திட்டங்களும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. அது பற்றி பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும்.

எல்லாமே இலவசமாக இல்லாமல் குறைந்த பட்ச நுழைவுக்கட்டணம் வசூலிப்பது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இம்முடிவு நிதி என்ற பிரச்சனையை அடிப்படையாய் கொண்டது அல்ல. இவ்வாறு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது என்பது திட்டமிட்ட 100 பேர் என எண்ணிக்கையை குறைத்து சிறப்பாக செய்ய இயலும் என்பதாலேயே இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு சலுகை உண்டு.

பதிவர்களின் ஆலேசனை வரவேற்கப்படுகிறது.

புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்காக,

இரா.சுகுமாரன்,
தொடர்பு எண்: 94431 05825

Thursday, September 20, 2007

ராமர்பால விவகாரம் - இந்தியவுக்கு தலைகுனிவு

இல்லாத ஒரு பாலத்தை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தி சேதுசமுத்திர திட்டத்தை முடக்கும் நோக்கில் மதவாத சக்திகள் தங்கள் செயல்பாட்டை முடுக்கிவிட்டுள்ளனர். உலக அளவில் இவர்களின் செயல்பாடு இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுதியுள்ளது.

இராவணன் சீதையை கடத்திச் சென்றபோது ராமர் சீதையை மீட்பதற்கு இலங்கை செல்ல அமைக்கப்பட்டது ராமர் பாலம். இது ராமாயணத்தில் சொல்லப்படும் செய்தி. பல கோடி மக்களின் நம்பிக்கை. இதை நம்பும் மக்கள் யாரும் சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சேதுசமுத்திரத் திட்டம் தென்னகத்துக்கு வளம் சேர்க்கும் என்றே நினைக்கின்றனர். ஆனால் மத உணர்வுகளை வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் சக்திகள் சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிராக களம் இறங்கியுள்ளன. இது தென்னகமக்களின் வாழ்வியல் ஆதாரத்தை அழிக்க நினைக்கும் வட இந்திய வெறியர்களின் கூட்டுச் சதி.

இவர்கள் வாதப்படி வைத்துக்கொண்டாலும் ராமர் பாலம் என்று சொல்லும் இடத்தில் வெறும் மணல் திட்டு மட்டுமே உள்ளது. ராமர் சீதையை மீட்ட பிறகு எதிரி படைகள் திரும்ப வராமல் இருப்பதற்கு அவரே பாலத்தை தகர்த்ததாகவும் கூறப்படுகிறது. வால்மீகி ராமாயணத்துக்கு ராஜாஜி எழுதிய உரையில் இச் செய்தி உள்ளது.
ராமர் பாலம் கட்டியதை நம்புபவர்கள், அவரே இடித்ததையும் நம்பித்தான் ஆக வேண்டும்.ஏற்கனவே இடிக்கப்பட்ட பாலத்தை இப்போது இடிக்கக் கூடாது என்று எதற்கு சர்ச்சை. அங்கு வெறும் மணல் திட்டுதானே உள்ளது. நீங்கள் கூறும் ராமபிரான்
உண்மையாக இருந்து, தற்போது உயிருடன் இருந்தால் பயன்பாட்டில் இல்லாத் பாலத்தை(மணல் திட்டை) இடிக்கக் கூடாது என்று கூறுவாரா. உங்களின் செயல்பாட்டுக்கு வெட்கித் தலைகுனிய மாட்டாரா.

இந்தியாவின் வளர்ச்சியை குறிப்பாக தென்னக மக்களின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் இவர்களின் செயல்பாட்டை நாம் ஓரணியில் இருந்து எதிர்க்க வேண்டும். உண்மையில் மதப்பிரச்சாரம் செய்யும் மகான்களிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் வரும் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிக்கலாம். அரசியல் பிழைப்புக்காக மத உணர்வுகளை தூண்டிவிடும் இவர்களை மத்திய அரசு கவனத்துடன் கையாள வேண்டும். இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கக் கூடாது. சேதுசமுத்திர திட்டத்தை கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். இந்த மதவாதிகளின் மோசமான செயல்பாடுகள் உலக அளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை எற்படுத்தியுள்ளன.

உலக வங்கி குறித்து மக்கள் தீர்ப்பாயம்

கோ.சுகுமாரன்

புதுதில்லியில் 2007, செப்டம்பர், 21 முதல் 24 வரை 4 நாட்கள் உலக வங்கி குறித்து மக்கள் தீர்ப்பாயம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகள் மீது வளர்ச்சி என்ற பேரில், உலக வங்கியின் திட்டங்களால் எவ்வாறு நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என்பதை வெளிக் கொண்டு வருவதற்கான முன்முயற்சியே இந்த மக்கள் தீர்ப்பாயம்.

உலக வங்கி, அடித்தட்டில் உழலும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடையே ஏற்படுத்திய தாக்கங்கள்:
குறிப்பாக -

1)பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், ஆதிவாசிகள், விவசாயிகள்.

2)சுற்றுச் சூழல், மனித உரிமைகள்.

3)மிகப் பெரிய மூலதனம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக உலக வங்கியின் திட்டங்கள்.

4)சமூக வளர்ச்சிக்கானத் திட்டங்களாகிய வறுமை ஒழிப்பு, ஏற்றதாழ்வைக் குறைத்தல், உணவு, கல்வி, மருத்துவம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தலையிடுதல் (எடுத்துக்காட்டாக மானியம் வெட்டு).

5)அரசு, தனியார் துறையிலும் ஒளிவுமறைவின்மை, ஊழல், பதிலளிக்கும் கடமை ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கங்கள்.

6)நாட்டின் ஆளுகை, இறையாண்மை, ஜனநாயக மதிப்பீடுகள் மீதான தாக்கம்.

7)சமூகத்தில் உண்டாக்கப்படும் மோதல்கள், இராணுவமயமாக்கல்.

ஆகியவை குறித்து இத்தீர்ப்பாயத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

இதில், உலக வங்கித் திட்ட்த்தால் பாதிக்கப்பட்டோர், இவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கத்தினர், அரசுத் தரப்பினர், உலக வங்கிப் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

இத்தீர்ப்பாயத்தில், எழுத்தாளர்கள் அருந்த்திராய், மகேஸ்வதா தேவி, முன்னாள் நீதிபதிகள் பி.பி.சாவந்த், எச்.சுரேஷ், உஷா, சமூக ஆர்வலர்கள் மெகர் இஞ்சினியர், அருணா ராய், பேராசிரியர் அமித் பதூரி உள்ளிட்டவர்கள் நடுவர்களாக இருந்து வழிநடத்த உள்ளனர்.
சமூக ஆர்வலர் மேதா பட்கர், பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய், மனித உரிமை ஆர்வலர், மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பிரசாந்த் பூஷன், அர்ஷ் மந்தர் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்க உள்ளனர்.

இந்தியா முழுவதும், உலக அளவிலும் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இத்தீர்ப்பாயத்தை நடத்துகின்றன. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவையும் இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
இத்தீர்ப்பாயத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பலர் கலந்துக் கொள்கின்றனர். புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், சென்னயிலிருந்து தோழமை அமைப்பு சார்பில் அ.தேவநேயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

உலக வங்கி தீர்ப்பாயம்

Friday, September 14, 2007

காற்றில் வந்த காதல் கவிதை


அறிவியல் காதல்
ஆக்ஸிஜனின் குறியீடு என்ன
என்று ஆசிரியர் கேட்டார்-நான்
உன் பெயரைச் சொன்னேன்;
மாணவர்கள் சிரித்தார்கள்;
ஆசிரியர் திகைத்தார்;
அவர்களுக்கெல்லாம் தெரியாது
நீதான் என் ஆக்ஸிஜன் என்று.