Sunday, October 14, 2007

விலைமகளின் கண்ணீர்

கவிஞர் தராபாரதி
(மறுபதிப்பு)
பூப்பறியாத பருவத்திலே
பொதுமகளாய் போனவள் நான்;
யாப்பறியாத கவிதை என்னை
யார் யாரோ வாசித்தார்.

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி;
எல்லா மதமும் கலக்கின்ற
என் மதம் மன்மதம்.

இனிப்புக் கடைநான் தசைப் பிண்டம்;
எல்லோருக்கும் திண்பண்டம்;
குனிந்து வருகிற நீதிபதி;
குற்றவாளியும் அடுத்தபடி.

தனயன் நுழைய முன் வாசல்;
தந்தை நழுவ பின் வாசல்;
முனிவர்களுக்கும் முறைவாசல்;
மூடாதிருக்கும் என் வாசல்.

மந்திரவாதியின் கைக்கோல் நான்;
மந்திரிமார்களுக்கும் வைக்கோல் நான்;
அந்தப்புறங்கள் சலித்தவருக்கு
அசைவ மனைவி ஆனவள் நான்.

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை;
நிரந்தரக் கணவன் வரவில்லை;
புதுமணப் பெண்போல் தினம்தோறும்;
பொய்க்கு இளமை அலங்கரம்.

தத்துவ ஞானிகள் மத்தியிலே
தசையவதானம் புரிகின்றேன்;
உத்தம புத்திரர் பலபேர்க்கு
ஒரு நாள் பத்தினி ஆகின்றேன்.

மேடையில் பெண்ணறம் பேசிய பின்- வந்து
மேதையும் என்னை தொட்டனைப்பான்;
நான் ஆடைகள் கட்ட நேரமின்றி
ஆண்களை மாற்றி கட்டுகிறேன்.

கூவம் நதிநான் தினம்தோறும்
குளித்த பிறகும் அழுக்காவேன்;
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்து பைசா கற்பூரம்.

உப்பு விலைதான் என் கற்புவிலை;
உலை வைக்கத்தான் இந்த நிலை;
தப்புதான் விட முடியவில்லை
தருமம் சோறு போடவில்லை.

-கவிஞர் தாராபாரதி
நன்றி: இது எங்கள் கிழக்கு.

6 comments:

cheena (சீனா) said...

என்ன ஒரு கவிதை - பொதுமகளின் புலம்பல் ( சரியான சொல்லா ??) - மனம் வருந்திய, தன் நிலை பற்றிய சுய விமர்சனம் -

//தனயன் நுழைய முன் வாசல்;
தந்தை நழுவ பின் வாசல்;
முனிவர்களுக்கும் முறைவாசல்;
மூடாதிருக்கும் என் வாசல்.//

எத்தனையோ வரிகள் பற்றி கருத்துக் கூற ஆசை - மனம் மறுக்கிறது.

பொதுமகளின் கண்ணீரை இது வரை யாருமே இவ்வாறு காட்டியதில்லை

மனம் கனக்கிறது - விடியலே வராதா ??

Tamilthotil said...

நான் ஆடைகள் கட்ட நேரமின்றி
ஆண்களை மாற்றி கட்டுகிறேன்.

எதார்த்தமான வார்த்தைகள், உங்களின் கவிதைகளில் நிரம்பிருக்கிறது. பொது மகளீரின் வாழ்க்கையை எந்த விரசமும் இல்லாமல் பதுவு செய்ததுக்கு நன்றி........
அவர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் வர இதெல்லாம் ஒரு தூண்டுகோள்.............................
கவிதை மிக அருமை நண்பரே........................

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் சீனா, மற்றும் தமிழ்ராஜாவுக்கு, இது எனது கவிதை கிடையாது. நான் குருவாக மதிக்கும்
மறைந்த தாராபாரதியின் கவிதை

தமிழ்நதி said...

நான் ஆடைகள் கட்ட நேரமின்றி
ஆண்களை மாற்றி கட்டுகிறேன்.

கூவம் நதிநான் தினம்தோறும்
குளித்த பிறகும் அழுக்காவேன்

அருமையான வரிகள். நல்லதொரு 'ரிதம்'இருக்கிறது வாசிக்கும்போது. கவிஞர் தாராபாரதியின் பெயர் புதிதாக இருக்கிறது. வாழும்போது அறிந்ததில்லை வருந்துகிறேன்.

Unknown said...

அன்புள்ள ஐயா,

இது கவிதைக்கு வேண்டுமானால் பொருந்தும் ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது. நான் அத‌ற்காக‌ விப‌ச்சார‌ம் ச‌ரி என்று சொல்ல‌‌வில்லை. ஆனால் விபச்சாரிகள் இல்லை என்றால் வெளியூர் வெளிநாடு செல்லும் ஆண்க‌ளின் நிலைதான் என்ன‌? காம‌மும் வ‌யிற்றுப் ப‌சி போல‌ ஒரு ப‌சி தான். அதை அவ‌ர்க‌ள் எவ்வாறு த‌னித்துக் கொள்வார்க‌ள்? இதை உணர்ந்த‌ துபை போல‌ சில‌ நாடுக‌ளும் மும்பை போன்ற‌ சில‌ ந‌க‌ர‌ங்க‌ளும் அத்தொழிலை வெளிப்ப‌டையாக்கிவிட்ட‌ன‌ர்.

Divya said...

மனம் கணத்தது,
தாரபாரதி மறைந்தாலும்.....அவர் கவிதைக்கு என் பாராட்டு!